Sunday, April 14, 2013

ஒரு சோகமும் சில நிகழ்வுகளும்

இரண்டு வருடங்கள் கழித்து இந்தியா வந்த நேரமோ என்னவோ, அடுத்தடுத்து, இரண்டு முறை இந்தியா செல்ல நேர்ந்தது. முதல் முறை, சந்தோசமான பயணமாகவும், இரண்டாம் முறை சோகமாகவும் அமைந்தது. முதன் முறை நீண்ட நாள்களுக்கு பின், இந்தியாவில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை, மற்றும் உறவினர் திருமணம் என்று எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தேனோ, அதற்க்கெல்லாம் சேர்த்து வைத்து வந்தது, அப்பாவின் மரண செய்தி. எதிர்பாராத மரணம். வெளிநாட்டில், வாழ்வதால் இருக்கும் பல இழப்புகளில், முதன்மையானது பெற்றோரை அருகிருந்து பார்த்து கொள்ள முடியாதது. அதுவும், அவர்களின் கடைசி நிமிடங்களில் அருகிருக்கும் வாய்ப்பை இழந்தது.

 பொங்கல் சமயம் இந்திய வந்த போது நான் சந்தித்த , என்னுடன் படித்த கல்லூரி நண்பர்  சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.  வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பு முடிந்ததும் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு அவர் இந்தியா திரும்பி விட்டார்.  ஏன் என்று நான் கேட்ட போது அவர் சொன்னது இது தான், "என் கல்யாணத்தின் போது இருந்த பலர் இப்போது போட்டோவாகி விட்டனர், என் பெற்றோரை போட்டோவாக மட்டும் நான் பார்க்க விரும்பவில்லை", அவர் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன.

ஒருவரின் அருமை, அவர் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை. இறப்புக்கு பின்னே பலரின் அருமை நமக்கு தெரிகிறது. சரி, இருக்கும் வரை என் அம்மாவை நன்கு கவனித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தால், இருப்பது இரண்டு வழிகள் மட்டுமே. ஒன்று, அவரை இங்கு அழைத்து வருவது, இல்லை நாங்கள் இந்தியா திரும்புவது.

இதில், இரண்டாவது முடிவு, பற்றி சற்று அதிகமா சிந்திக்க ஆரம்பித்தேன். என் முகத்தில்
அறைந்தது, இந்தியாவில் இருக்கும் பணம், பணம் என்று பண பைத்தியமாகும் மக்கள். உறவுகள் என்னும் காக்கை கூட்டம், சாவு வீட்டுக்கு வந்திருந்தாலும், பணம் பர பற்றி பேசிய பேச்சு, பணம் இருந்தவர்கள் காட்டிய படோடபம், பணம் இல்லாதவர்களை அவர்கள் நடந்திய விதம், என்று அனைத்தும். ஒரு சாவு வீடு என்று கூட பார்க்காமல் வந்திருந்த அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி " எவ்வளோ சம்பளம் உனக்கு.", " வீட்டுக்கு பணம் அனுப்புறையா, எவ்வளவு.". " அமெரிகாவில கிரீன் கார்டு இருக்கா., வீடு இருக்கா..? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். இதில் சிலர் " என்னிடம் வந்து நான் கஷ்டபடுகிறேன், கொஞ்சம் என்னை கவனிக்க கூடாதா? என்று கேட்டது, அதிலும் சிலர், "என் பையன் வேலை இல்லாம கஷ்டப்படுறான் ஏதாவது வேலை பார்த்து கொடேன் ", என்று நான் எம்ப்லோய்மென்ட் exchange நடந்துவது போல application போட்டனர். ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து "பார்க்கலாம் " என்று சொன்னாலோ, என் முதுகுக்கு பின்னால் எனக்கு கேட்கும் படியே சிலர் " எல்லாம் பணத்திமிர்" என்று திட்டுவதை கேட்க்க முடிந்தது. கஷ்டப்படுகிறார்களே என்று பணம் கொடுத்தாலும் " இவ்வளவுதானா,?" என்று முகத்தை திருப்பிக்கொண்டு சிலர் சென்றனர். இதில் பணம் இருக்கும் சிலரோ தங்கள் படோடபத்தை எல்லாம், தாங்கள் வார்த்தைகளில் தெளித்து, தாங்கள் பெரிய ஆட்கள் என்று காட்டிகொண்டிருன்தனர்.

இவர்கள் எல்லாம் என்னை என்ன என்று நினைத்து கொண்டனர் என்று தெரியவில்லை. " அப்பா இறந்த சோகத்துடன் இருக்கும்  எங்களிடம் என்ன எதிர் பார்கிறார்கள்?. அழுது அழுது அலுத்து போயிருந்த என் அம்மாவிடம் சென்று சொத்து விஷயம் வேறு பேசியபடி இருந்தனர்.

"எப்போடா சொந்தகாரங்க நல்லவங்கள இருந்திருக்காங்க, இப்போ இருக்க?, என்று மனதை தேத்திகொண்டு இந்தியா வந்துவிடலாம் என்று நினைத்தால், அடுத்து முகத்தில் அறைந்தது, இங்கு ஆராய்சிக்கு கொடுக்கும் அமுக்கியத்துவம். அமுக்கியம்-முக்கியத்தின் எதிர்மறை. நான் படித்த உலகப்புகழ் பெற்ற மதுரை காமராஜர் பல்கலை கழக , உயிரியல் தொழில் நுட்ப துறையில் நடக்கும் சில நிகழ்வுகளால் தற்போது பணம் இருந்தாலோ, அல்லது சிபாரிசு இருந்தாலோ , யாருக்கும் பேராசிரியர் பதவி, தகுதி இருப்பினும் பணம் இல்லாவிடில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் . ஆராய்ச்சி கூடம் வைக்கலாம் என்றால் "பலருக்கு கொடுக்க வேண்டிய சம்திங்" என, அனைத்தும் என்னை மிரட்ட ஆரம்பித்தன.

சரி,இப்போது IT க்கு தானே மதிப்பு, பேசாம, பீல்ட்  மாத்திட்டு IT ல
சேர்ந்துடலாம்னு நினைச்சா, IT  மக்கள் படும் பாடு இன்னொரு பக்கம் மனதை பிழிந்தது. பெற்றோர் நிமித்தம், அமெரிக்காவை விட்டு அங்கு சென்ற பல IT குடும்பங்கள், அங்கு இருக்கும் 12 மணி நேரந்திற்கும் குறையாத வேலை, சனி கிழமை கூட வேலை, ஆபிஸ் பாலிடிக்ஸ், குடும்பத்துடன் இருக்கும் நேரம் மிக குறைவு, குழந்தைகள் கல்வித்தரம் என்று பார்த்து விட்டு இங்கு திரும்பி வந்ததை நினைத்து பீல்ட்  மாத்துவது என்பது முடியாததாகி விட்டது.

அடுத்து என் முகத்தில் அறைந்தது நான் பார்த்த "pollution" அதனால் முகுந்துக்கு ஏற்பட்ட "வீசிங்". மதுரையில், திருப்பரங்குன்றம் மலையை பகல் நேரங்களில் பார்க்க முடிவதில்லை. அப்படி ஒரு புகை மூட்டம். மதுரையில் எல்லா இடங்களிலும் எரிக்கப்படும் குப்பைகள். அதனால் ஏற்படும் புகை, வளி மண்டலத்தில் கலந்து கொடுக்கும் வீசிங் பிரச்சனைகள். மக்களுக்கு குப்பைகளை எரிப்பதால் பிரச்சனைகள் உண்டாகின்றன என்று தெரிந்திருந்தாலும் எதனையும் கண்டு கொள்ளாத பணம் மட்டுமே  குறியாக உள்ள அரசாங்கம்.

என்ன ஆயிற்று இந்தியாவிற்கு, நான் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த இந்தியாவை காணவில்லை. எங்கும்  பணம் பணம் பணம் தான்.

 எல்லாம் அனுபவித்து உணர்ந்த பிறகு, என் கல்லூரி நண்பரிடம் மீண்டும் பேசினேன். அவர் சொன்னது "இந்தியாவில் நெருங்கிய சொந்தங்கள் தவிர, வேறெதுவும் இல்லை" என்பதே.

 

Sunday, March 10, 2013

விஸ்வரூப கும்கி

இது திரை விமர்சன பதிவு அல்ல. ஆயினும் தலைப்பில் சொன்ன இரண்டு திரைப்படங்களையும் பார்த்த பிறகு எனக்குள் தோன்றிய சில எண்ண பதிவுகளின் தொகுப்பு இது.

எனக்குள் தோன்றிய சில கேள்விகள்
  1. திரைப்படம் என்பது என்ன?
  2. எதற்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது?
  3. யாருக்காக எடுக்கப்படுகிறது?
  4. எப்படி திரைப்படம் எடுக்கபடுகிறது?
  5. தேறாத படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க வைக்க படுகின்றன?
இதற்கு விஸ்வரூபம் திரைப்படத்தை முதலில் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

  • திரைப்படம் என்பது என்ன?
பல ஆங்கில படங்களையும் கொஞ்சம் தமிழையும்  கலந்து ஒரு திரைக்கதை தயார் செய்து அதில்  பெண் தன்மையான ஆள் என்று ஒரு கன்றாவி  ட்விஸ்ட் ஒன்றை வைத்து, நிறைய ரத்தம் சேர்த்து, ஒரு பெண் பேசுவதை நக்கல் அடித்து அவள் ஜாதியை கிண்டல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் டயலாக் வைத்தால் முடிந்தது திரைப்படம் ரெடி.

  • எதற்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது?
தான் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா என்று உலகுக்கு காட்டவும்., நானும் உலக பிரச்சனையை வைத்து படம் எடுத்திருக்கிறேன் பார் என்று தம்பட்டம் அடித்து கொள்ளவும்.
  • யாருக்காக எடுக்கப்படுகிறது?
நீங்க பெரிய அறிவு ஜீவி தலைவா, உங்களுக்கு  இருக்க அறிவுக்கு நீங்க எல்லாம் ஹாலிவுட் ல இருந்திருக்கனும், என்று ஜால்ரா அடிக்கும் சிலருக்காகவும். அப்புறம், "WoW, its an awesome movie, its going to take indian cinema to another level" என்று ஆங்கிலத்தில் பிதற்றும் சில மேல் தட்டு மக்களுக்காகவும் எடுக்கப்படுகிறது.

  • எப்படி திரைப்படம் எடுக்கபடுகிறது?
பணம் பட்ஜெட் குறைந்தது 100 கோடி.சில பல நவீன தொழில்நுட்பங்கள்  கட்டாயம் இருக்கணும்.பாரின் பொண்ணுங்க அல்லது ஆளுங்க பலர் படம் முழுதும் வரணும். நாம உலக பிரச்சனையை பற்றி பேசுவதால வெளிநாட்டில படப்பிடிப்பு கட்டாயம் இருக்கணும். படத்தில ஆங்கில டயலாக்ஸ்  நிறையவும், தமிழ் கொஞ்சமே கொஞ்சமும் சேர்த்துக்கனும். பாதி நேரம் என்ன பேசுறாங்கன்னு ஆடியன்ஸு  மண்டைய பிச்சுக்கணும்.

  •  தேறாத படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க வைக்க படுகின்றன?
நம்ம எடுக்கிற படங்கள் எப்பவுமே உலக பிரச்னையை பத்தி பேசுறதால கிராமத்தில இருக்கிறவனுக்கு ஒன்னும் புரிய போறதில்லை. நம்ம அடிபிடிகள் மட்டுமே நம்பி எப்படி 100 கோடியை திருப்பி எடுப்பது..அப்படின்னு யோசிச்சு..புதுசு புத்சா தானே  பிரச்சனை கிளப்பணும், நெகடிவ் பப்ளிசிட்டி சும்மா பிச்சுக்கும்..அப்புறம் என்ன வந்தவன் போனவன் எல்லாம் அதையே பேச வச்சு போட்ட காசை விட அதிகம் அள்ளிடலாம்.


இப்போது அடுத்த படமான கும்கிக்கு வருவோம்.

விஸ்வரூம் படத்திற்கு ஒவ்வொரு வகையிலும் எதிர்பதமாக இருந்தது கும்கி.

அழகான கதை, கதை களன் .நம் மண்ணின்  மனிதர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை நம்பிக்கை, யானைகள், கும்கி யானை, நடிக்க தெரிந்த ஹீரோ,   ஹீரோயின், துணை நடிகர்கள், பாடல்கள்  என்று அதகள படுத்தி இருந்தார்கள்.

இந்திய கிராமங்களின் ஒவ்வொரு தெருக்களில் மட்டுமன்றி இங்கும் கூட "சொய்  சொய் " பாடல் கேட்க்க முடிகிறது.

இப்போது மறுபடியும் என்னுடைய ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.

திரைப்படம் என்பது என்ன?

ஒவ்வொரு நாட்டிலும் வாழும் அல்லது வாழ்ந்த மக்களின் நிலையை, வாழ்வியலை படம் பிடித்து காட்டுவது திரைப்படம்.

எதற்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது?, யாருக்காக எடுக்கப்படுகிறது?

அனைத்து தரப்பு மக்களையும் கவர, அவர்களும் சந்தோசத்தை அனுபவிக்க திரைப்படம் எடுக்க படுகிறது.

எப்படி திரைப்படம் எடுக்கபடுகிறது?
நல்ல கதை,பாடல்கள், நடிக நடிகையர் அமைந்து நல்ல ரசனையுள்ள ஒரு இயக்குனர் கையில் ஒரு திரைப்படம் மாட்டும் பொது மன நிறைவுள்ள ஒரு படம் கிடைக்கிறது.

தேறாத படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜெயிக்க வைக்க படுகின்றன?

நல்ல படங்களுக்கு அதிக விளம்பரம் தேவை இல்லை. அது எப்படியும் கவனிக்க பட்டுவிடும்.
 

Friday, March 1, 2013

அறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி?


தேவையான பொருள்கள்

2-3 வயது குழந்தை
பாட அட்டவணை - பல
பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்)
அறிவியல் புத்தகம் - பல
வானவியல் புத்தகம் - பல
கணிதம் - பல
ஆங்கிலம் - எண்ணிலடங்கா
அறிவு ஜீவி பொம்மைகள்:  பல
பணம்- நிறைய.



ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது 
  1. ஒவ்வொரு நாளும் குழந்தையிடம் நீ மத்தவங்களை விட பெரியாளா வரணும், நீ தான் பெரிய ஆளா இருக்கணும். வேறு யாரையும் உன்னை விட பெரியாளா ஆக விடக்கூடாது என்று சொல்ல வேண்டும் 
  2. அடுத்த குழந்தைகளை விட நம் குழந்ந்தை வித்தியாசமாக ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்து பட்டியலிட வேண்டும் .
  3. இப்படி பட்டியலில்  இட்டபடி ஒவ்வொரு நாளிலும் நடைமுறை படுத்த வேண்டும்.

செய் முறை 

  1. நம் குழந்தை வைத்திருக்கும் மற்ற குழந்தைகள் விளையாடும் எந்த பொம்மைகளும் வாங்கி கொடுக்க கூடாது. எப்போதும் அறிவு ஜீவி பொம்மைகள் மட்டுமே  வைத்து விளையாட விடவும்.
  2. உங்கள் குழந்தை வயதொத்த மற்ற குழந்தைகள் உங்கள் வீட்டுக்கு விளையாட வந்தாலோ, அந்த குழந்தைக ளி டம், உங்கள் குழந்தை "வெரி அட்வான்ஸ் "அதனால் அந்த குழந்தைகளுடன் செட்  ஆகாது என்று கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பவும்.
  3. உங்கள் குழந்தையை வயதை விட பெரிய வயது குழந்தைகளுடன் எப்போதும் விளையாட விடவும்.
  4. கலரிங், பெயிண்ட் அடித்தல், பேனா வைத்து கிறுக்குதல், டீவியில் கார்டூன்  பார்த்தல், போன்ற சாதாரண குழந்தைகள் செய்யும் எதையும் உங்கள் குழந்தையை செய்ய விடாமல், எப்போதும் கணிதம், வானவியல், அறிவியல், ஆங்கிலம்..போன்ற புத்தகங்களை படிக்க மட்டுமே வற்புறுத்த வேண்டும்.
  5. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடி அனைத்திலும் உங்கள் குழந்தையை சேர்த்து விட வேண்டும்.
  6.  யாராவது உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் அவர்களின் முன் உங்கள் குழந்தையின் திறமைகளை மறக்காமல் பட்டியலிடவும்.  அவர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் விட கூடாது.
  7. உங்கள் குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தவர்கள் முன்னிலையில் ஆடவோ,பாடவோ செய்ய வைக்க வேண்டும்.
  8. குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று உங்கள் குழந்தை எப்படி படிக்கிறது என்று விசாரிப்பதோடு நிறுத்தி விடாமல், என் குழந்தை ரொம்ப அட்வன்ஸ்டு அதனால, டபுள் ப்ரோமோஷன் கொடுங்க என்று நச்சரிக்க வேண்டும்.
  9. அவர்கள் உங்கள் தொல்லை தாங்க  முடியாமல் ஒன்று உங்கள் குழந்தையை டபுள் ப்ரொமோட் செய்யலாம், அல்லது உங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்க்க சொல்லி விடலாம். எதற்கும் தயாராக இருக்கவும்.
  10. அப்படி உங்கள் குழந்தை டபுள் ப்ரொமோட் செய்ய பட்டால், உடனே உங்கள் குழந்தையுடன் படித்த அடுத்த குழந்தைகளின் பெற்றோருக்கு போனை போட்டு, ஏன் உங்க குழந்தை ப்ரொமோட் ஆகல என்று துக்கம் விசாரிக்க வேண்டும்.அதோடு விடாமல் உங்கள் குழந்தையிடம்.."நீ வேற கிளாஸ் போயிட்ட அதனால பழைய நண்பர்களுடன் விளையாடாதே " என்று கண்டிப்பாக சொல்லவும்.
 அவ்வளவே!! அறிவாளி குழந்தை நீங்கள் தயாரித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.