Tuesday, February 11, 2014

விடாது கருப்பு!

நான் கல்லூரியில் சேர்ந்த புதிது அது. துணைப்பாடமாக வேதியியல் பாடம். அப்போது ஆய்வறையில் செய்முறை பாடம் நடந்தது. நான் படித்தது மாநகராட்சி பள்ளியில் என்பதால் எனக்கு வேதியியல் செய்முறை என்பது வெறும் மனப்பாடம் செய்து பரிட்சையில் எழுதுவது மட்டுமே. நான் முழிக்க ஆரம்பிக்க, அங்கிருந்த வேதியில் விரிவுரையாளர் என்னிடம் சொன்னது இது தான், “எந்த சாக்கடையில இருந்து வந்திருக்க?, இப்படி எங்கிருந்தாவது வந்துடறது, அப்புறம் எங்க உயிர வாங்குறது?என்றார். அதை நினைத்து பல நாட்கள் அழுது இருக்கிறேன். பின்னர் அந்த அம்மா சில வருடங்களில் என்னை பல்கலை கழகத்தில் பார்த்து அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டது வேறு கதை.

அப்படியே காலம் உருண்டு செல்ல சில வருடங்களுக்கு முன்  இந்தியாவில் இருந்து படிக்க வந்த நான் என்னுடைய இந்தியன் ஆக்செண்ட் ஆங்கிலத்தில் ஒரு வரவேற்பறை அம்மாவிடம் லாபிற்கு வழிகேட்க அந்த அம்மா என்னுடைய ஆங்கிலம் புரியாமல் ஏதோ சொல்ல நான் அவர்கள் ஆக்செண்டு புரியாமல் விழிக்க கடைசியில் அந்த அம்மா என்னை படிக்காதவள் என்று நினைத்து சைகையில் சொல்ல எனக்கு என்னவோ ஆனது.அதன் பிறகு உஷாரான நான் அவர்களிடம் “ப்ளீஸ் டாக் ஸ்லோலி” என்று சொல்லி அவர்கள் பேசுவதை புரிந்து கொண்டதுண்டு. 

தற்போது வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் ஒரு சில கூத்துகள் எனக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டன. அதாவது, நீங்கள் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும், விஷய ஞானம் உள்ளவராக இருந்தாலும் ஒரு படிக்கு மேலே நீங்கள் பதவி உயர்வு பெற முடியாது. உங்களால் ஆராய்ச்சி கட்டுரை எழுதும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தாலும், பல நேரங்களில் உங்கள் வெள்ளை பாஸ்கள் உங்களுக்கு நேடிவ் லாங்குவேஜ் ஆங்கிலம் இல்லை என்று சொல்லி ஒதுக்கலாம். பல நேரங்களில் நீங்கள் கொடுக்கும் நல்ல யோசனைகள் எல்லாம் கண்டுகொள்ளபடாமல் போகலாம். அதுவும் நீங்கள் பெண்ணாக இருப்பின் இன்னும் மோசமே. பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக எம்.பி.ஏ படிப்பவர்கள் இங்கு அதிகம்.

மற்ற துறைக்கு எப்படி என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்தாலோ உங்கள் வாழ்க்கை கிட்டதட்ட அந்தரத்தில் தொங்குவது போன்றது தான். முக்கால்வாசி நேரம் முனைவர் படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பை தேட முனைபவர்கள் முதலில் சேர்வது Postdoc fellowship எனப்படும் ஆராய்ச்சி ஸ்டைபண்டு தான். அந்த சம்பளம் மிக மிக சொற்பம். ஒரு சில நேரங்களில் உங்களுக்கு ஹைச் 1 விசா கிடைக்கலாம் இல்லாவிடில் எஃப் 1 விசா தான். அப்படி ஹைச் 1 கிடைத்து விட்டாலும் அப்பாடா என்று உட்கார முடியாது,  ஹைச் 1 விசாவை நம்பி இருப்பவர் என்றால் நீங்கள் ஒரு சொல்லப்படாத அடிமைதான். உங்கள் பாஸ் சொல்லும் அனைத்திற்கும் ஆட வேண்டும்.  ஒரு வேலை உங்களுக்கு ஹெச் ஒன் கிடைத்து, கீரீன் கார்டும் கிடைத்து விட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எங்கு வேலைக்கு சென்றாலும் நீங்கள் அங்கிருக்கும் பல வெள்ளை மனிதர்களை விட ஒரு படி கீழே தான் நடத்தபடுவீர்கள். இப்படி எனக்கு தெரிந்தே நிறைய பேர் படும் கஷ்டங்களை பார்த்து அனுபவித்தும் இருக்கிறேன்.

ஓ, அதெல்லாம் இல்லை எங்கள் கம்பெனியில் அதெல்லாம் கிடையாது, பாருங்கள் இப்போது மைக்ரோச்ஸாஃப்ட், கூகுளில் எல்லாம் நிறைய இந்திய வம்சாவளியினர் பெரிய பொஷிஷனில் இருக்கிறார்கள் என்று சொல்பவரா நீங்கள். அப்படியாயின் என்னுடைய பதில் ஒன்று தான் ”அவர்கள் கடந்து வந்த பாதை பற்றி நமக்கு தெரியாது”.


இப்போது எல்லாம் யாராவது என்னை கீழாக நடத்தினாலோ பேசினாலோ அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று போயிருக்கிறேன். ஆனால் எனக்கு இருக்கும் பயம் எல்லாம் முகுந்த் தலைமுறை எப்படி இருக்கும்/அல்லது முகுந்துக்கு எப்படி இதை எல்லாம் சொல்லி கொடுப்பது என்பது தான்.

 சில நாட்களுக்கு முன் எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இங்கு இருக்கும் மியூசியம் சென்றிருந்தோம். அங்கு ”நேச்சர் ஃக்வெஸ்ட்” என்று சில ஊர்வனவற்றை பற்றி செய்முறை விளக்கம் அளித்தனர் சில இளவயது பெண்கள். பார்வையாளர்களாக பல வெள்ளை குழந்தைகளும் சில கருப்பு குழந்தைகளும் முகுந்தும் இருந்தனர். செய்முறை விளக்கம் அளித்த பெண்கள் பல கேள்விகளை குழந்தைகளிடம் கேட்டனர். அப்படி அவர்கள் கேட்ட கேள்விக்கு வெள்ளை குழந்தைகளிடம் இருந்து மட்டுமே பதிலை பெற்று கொண்டனர். கருப்பு குழந்தைகளோ அல்லது முகுந்தோ கையை தூக்கினாலும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதை எல்லாம் பார்த்து பார்த்து வெறுப்படைந்தாலும் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். ஆனால் முகுந்த் எந்த வித சலனமும் இல்லாமல் திரும்ப திரும்ப கையை தூக்கி கொண்டிருந்தான். பின்னர் பொறுமை இழந்து “Why are you not asking me?" என்று கேட்டே விட்டான். அதன் பின்னர் அந்த பெண்மணிகள் அவனிடம் ஒரு பதில் கேட்டனர்.

அப்பொழுதே நம்பிக்கை வந்துவிட்டது. இந்த தலைமுறை எதையும் தாங்கிகொண்டு செல்பவர்கள் அல்லர், தமக்கு உரிமையானதை எப்படியாவது கேட்டு வாங்கி கொள்வார்கள் என்று. இருப்பினும் மீண்டுவருவது/சாதிப்பது எப்படி என்று குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது முக்கியம் என்று நினைக்கிறேன்.

First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.